கிருஷ்ணகுமார்
கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் எமது அரசாங்கத்தில் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா தெரிவித்தார்.

மகுடம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் பிரபல எழுத்தாளர் வி .மைக்கல் கொலினின் எழுதிய ‘அன்பின் முத்தங்கள்” கவிதை நூல் வெளியீட்டு விழா இன்று (19) மட்டக்களப்பு தமிழ் சங்கத்தில் நடைபெற்றது.

மட்டக்களப்பு தமிழ்ச் சங்கத்தில் சங்கத்தின் தலைவர் வி.ரஞ்சித மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், முதன்மை விருந்தினராக பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திரா கலந்துகொண்டார்.

சிறப்பு விருந்தினர்களாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு, கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் வ.கனக சிங்கம், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா, மட்டக்களப்பு மாவட்ட செயலக உதவி மாவட்ட செயலாளர் கு.பிரணவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அழைப்பு விருந்தினராக எழுத்தாளரும் ஊடகவியலாளருமான திருமலை நவம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, அதிதிகள் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து மங்கள விளக்கேற்றல் மற்றும் தமிழ் தாய் வாழ்த்து இடம்பெற்றதன் பின்பு மௌன இறைவணக்கத்தை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

நூல் வெளியீட்டின் வரவேற்புரையை தமிழ் சங்கத்தின் பிரதிச்செயலாளர் நிகழ்த்தியதுடன் நூலின் வெளியீட்டு உரையை தமிழ்ச்சங்கத்தின் பொதுச்செயலாளர் சட்டத்தரணி மு.கணேசராஜாவினால் நிகழ்த்தப்பட்டது.
அதனை தொடர்ந்து நூல் வெளியீடுசெய்யப்பட்டதுடன் அதிதிகளுக்கும் நூல்கள் வழங்கப்பட்டது.

அதனை தொடர்ந்து நூலின் நயவுரையை சிரேஷ்ட விரிவுரையாளர் மோகனதாஸ் அவர்களால் நிகழ்த்தப்பட்டதுடன் தொடர்ந்து அதிதிகளின் உரைகள் நடைபெற்றது.

இதன்போது நூலாசிரியர் மற்றும் முதன்மை அதிதிகள் கௌரவிக்கப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களுக்கும் நூல்கள் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது கருத்து தெரிவித்த பிரதியமைச்சர்,
கடந்த ஆட்சியாளர்கள் தங்களின் தோல்வியின் விளிம்பில் எடுக்கும் ஆயுதம் இனவாதம் ஆனால் எமது அரசாங்கத்தில் எந்த ஒரு கட்டத்திலும் நாம் அதனை முன்னெடுக்க போவதில்லை.
எமக்கு எந்தவித பாதிப்புகள் வந்தாலும் நாம் ஒரு காலமும் இனவாதத்தை கையில் எடுக்கப் போவதில்லை என்ற உத்தர வாதத்தை நான் உங்களுக்கு தருகின்றேன். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றத்தில் அரசியல் நெருக்கடி மாற்றப்பட்டுள்ளது.
இருப்பினும் பொருளாதார நெருக்கடி சமூக நெருக்கடிகள் காணப்படுகின்றன இவற்றை நாம் வேகமாக மாற்றியமைக்க வேண்டிய தேவை உள்ளது. நாம் நாட்டை மீள கட்டியெழுப்ப வேண்டிய தேவை உள்ளது சமூக மாற்றத்தின் பிரதான பங்கினை இலக்கியவாதிகள் வகிக்கின்றனர்.
எமக்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் பலமானது மாற்றியமைக்கப்பட்டுள்ளது அரசியல் முரண்பாடுகள் ஆனது தேர்தல் நிறைவடைந்த பின் அவை கைவிடப்படவேண்டும். மக்களுக்காக நாம் இன மத மொழி வேறுபாடு இன்றி ஒன்றிணைய வேண்டும் இதனை மாற்றி அமைத்து நாம் சரியான திசைக்கு மக்களை வழிநடத்த வேண்டிய இடத்தில் இருக்கின்றோம்.


