ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்
மட்டக்களப்பு – ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்தின் ஊழியர்கள் இன்று காலை கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரதேச செயலகத்தின் நிருவாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி அங்குள்ள ஊழியர்கள் வரவு பதிவேட்டில் கையொப்பமிடாது பிரதேச செயலகத்தின் வாயிலை மூடிவைத்து கவனயீர்ப்புப் போராட்டம் நடாத்தியுள்ளனர்.

இதனால் பிரதேச செயலாளர் உட்பட ஊழியர்கள் எவரும் வரவுப்பதிவேட்டில் கையொப்பமிட முடியவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
கவனயீர்ப்புப்போhட்ட வேளையில் பிரதேச செயலகத்தின் சுற்றுமதிலில் நிருவாக உத்தியோகத்தருக்கெதிராக வாசகங்கள் எழுதப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
சக ஊழியர்களை அடக்குமுறைக்கு உட்படுத்தும் நிருவாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்!
சிற்றூழியர்களை தரக்குறைவாக நடாத்த வேண்டாம்!
ஊழியர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தி மன உழைச்சலை ஏற்படுத்த வேண்டாம்! என்பன போன்ற வாசகங்கள் அங்கிருந்த போஸ்டர்களில் எழுதப்பட்டிருந்தன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக அதிகாரிகள் இந்த ஊழியர்கள் சார்பிலான பிரதிநிதிகளை பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர்.
எனினும் நிருவாக உத்தியோகத்தர் இடமாற்றம் செய்யப்படும்வரை தாம் கடமைக்குத் திரும்புவதில்லையென ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை காலை 10.30 மணியின் பின்னர் ஊழியர்கள் அலுவலகத்திற்குள் சென்று வரவுப் பதிவு செய்யாது பொதுமக்களுக்கான பணிகளில் ஈடுபடுவதாக அங்குள்ள அதிகாரியொருவர் தெரிவித்தார்.




