படுகொலைசெய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்தவிக்ரமதுங்கவின் நினைவேந்தல் மட்டக்களப்பில்

இந்த நாட்டில் நடைபெற்ற ஊழல்களையும் மனித உரிமை மீறல்களையும் வெளிக்கொணர்ந்த பல ஊடகவியலாளர்கள் கடந்த காலத்தில் படுகொலைசெய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரையில் ஒரு ஊடகவியலாளரின் படுகொலைக்கு நீதி கிடைக்கவில்லையெனவும் புதிய அரசாவது இதற்கான நீதியை பெற்றுத்தர நடவடிக்கையெடுக்கவேண்டும் என கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

படுகொலை செய்யப்பட்ட சிரேஸ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் 16ஆவது நினைவேந்தல் மற்றும் நீதிகோரிய போராட்டம் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக அமைந்துள்ள மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியில் இடம்பெற்றது.

மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் என்பன இணைந்து இந்த நிகழ்வினை நடாத்தியது.

மட்டு.ஊடக அமையம்,மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் தலைவர் வா.கிருஸ்ணகுமாரின் ஏற்பாட்டில் சிரேஸ்ட ஊடகவியலாளர் க.சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இந்நிகழ்வில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான கோ.கருணாகரன், பா.அரியநேத்திரன், மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது உயிரிழந்த ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் உருவப்படத்துக்கு சிரேஸ்ட ஊடகவியலாளர்களான கங்காதரன் மற்றும் க.சரவணன் ஆகியோரினால் மலர்மாலை அணிவிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தலைவர் மற்றும் கலந்துகொண்டவர்களினால் ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் ஒரு நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இதன்போது படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்கள், காணாமல்ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிகோரியும் ஊடக சுதந்திரத்தினை வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

படுகொலைசெய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கான நீதியை பெற்றுக்கொடுக்க விசாரணைகளை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியும் குற்றவாளிகளை கைதுசெய்யுமாறும் வலியுறுத்தியும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *