பாறுக் ஷிஹான்
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மதுபான சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து
விளக்குமாறு ஏந்தி நுதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

செவ்வாயக்கிழமை (21) அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக பெரிய நீலாவணை பகுதியில் புதிய மதுபானசாலை
வேண்டாம் “மதுக்கடை வாசல் மரணத்தின் வாசல்” “முதுகெலும்பற்றவரின் முயற்சியே மதுபானக்கடை” “வேண்டாம் வேண்டாம் மதுக்கடை வேண்டாம்” போன்ற சுலோகங்களை ஏந்தியவாறு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இவ்வாறு பொது மக்கள் விளக்குமாறுகளை ஏற்தி பல்வேறு பதாதைகளுடன் கோஷங்களை எழுப்பியதுடன் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாங்கள் போராட்டம் மேற்கொண்ட போது அன்று திறக்கப்பட இருந்த மதுபான சாலையை அப்பொழுது மூடினார்கள்.ஆனால் இப்பொழுது மீண்டும் திறப்பதற்கு ஏற்பாடு நடைபெறுகிறது.எனவே எங்களுக்கு இவ்வாறான மதுபானசாலை வேண்டாம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கேட்டுக் கொண்டனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவில் உள்ள பெரியநீலாவணையில் 2024ஆம் ஆண்டு புதிதாகத் திறக்கப்பட்ட மதுபானச் சாலையை இயங்க விடாமல் இவ்வூரில் உள்ள சிவில் அமைப்புக்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து ஆர்ப்பாட்டம் செய்தமையினால் தற்காலிகமாக மூடப்பட்ட மதுபானச் சாலையை 2025 ஆம் ஆண்டு மீளத் திறக்க கலால் திணைக்களம் அனுமதி அளித்துள்ளது.

இதற்கமைய, கலால் திணைக்கள உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர் பெரியநீலாவணையில் உள்ள சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளுடன்
கலந்துரையாடலில் ஈடுபட்டனர். மக்களின் கோரிக்கை உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. மதுபானசாலை உரிய முடிவு வரும்வரை மூடியே இருக்கும் என மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் அவ்விடத்திற்கு வருகை தந்த வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே அதிசயராஜிடம் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள்
இணைந்து மகஜர் ஒன்றினை வழங்கினர்.பின்னர் போராட்டம் நிறைவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மக்கள் கோரிக்கையை ஏற்று பெரிய நீலாவணை மதுபானசாலை திறக்க அரசு அனுமதிக்க கூடாது என நேற்றையதினம்(21) பாராளுமன்றில் கோடிஸ்வரன் எம். பி வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.