கிருஷ்ணகுமார்
மட்டக்களப்பு – மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சினை தொடர்பான நீதி கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான ஏறாவூர் பொலிஸாரினால் தொடரப்பட்ட வழக்கில் ஊடகவியலாளர் ஒருவருக்கு திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர்களுக்கு 01 இலட்சம் ரூபா சரீரப்பிணை வழங்கப்பட்டதுடன் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பட்டுள்ளது.

கடந்த 2023 ஒக்டோபர் 8ம் திகதி மட்டக்களப்பு – செங்கலடி பகுதிக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வருகையின் போது கொம்மாதுறை பகுதியில் – மயிலத்தமடு மாதவனை மேச்சல்தரை பிரச்சினைக்கு தீர்வு கோரி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் – முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், பண்ணையாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க உறுப்பினர்கள் மற்றும் இரண்டு ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட 30 சந்தேக நபர்கள் எனக்குறிப்பிட்டு ஏறாவூர் பொலிஸாரினால் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டிருந்தது.

இன்றைய தினம் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற நீதிபதி மதுஜலா கேதீஸ்வரன் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இன்றைய தினம் (22) பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் பாராளுமன்ற அமர்வு காரணமாக நீதிமன்றில் ஆஜராகமுடியவில்லையென நீதிவானின் கவனத்திற்கு சட்டத்தரணியால் கொண்டுவரப்பட்டது.

இதேபோன்று ஏற்கனவே நீதிமன்றுக்கு சமூகமளிக்காத நிலையில் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட ஊடகவியலாளர் புண்ணியமூர்த்தி சசிகரன், வெளிநாடு சென்றுள்ளதாக நீதிமன்றின் கவனத்திற்கு பொலிஸாரினால் கொண்டுவரப்பட்டது.
இந்த நிலையில் ஊடகவியலாளர் சசிகரனுக்கு திறந்த பிடியாணை பிறக்கப்பட்டதுடன் குடிவரவு-குடியகல்வு திணைக்களத்திற்கும் அறிவிக்குமாறும் உத்தரவிட்ட நீதிவான்இஇன்றைய நீதிமன்றி தோற்றிய 27பேருக்கும் ஒரு இலட்சம் ரூபா சரீரப்பிணையில் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கும் நிபந்தனையுடன் பிணையில் செல்ல அனுமதித்தார்.

அத்துடன் குறித்த வழக்கின் விசாரணைக்காக எதிர்வரும் ஏப்ரல் 21வரையில் வழக்கினை ஒத்திவைப்பதாக அறிவித்தார்.
இன்றைய வழக்கு விசாரணையின்போது, வழக்கில் தொடர்புடைய 30 பேரில் இருவர் மன்றுக்கு சமூகமளிக்காமையினால் அடுத்த வழக்கில் தொடர்புடைய அனைவரையும் ஆஜராகும்படி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.