இலங்கையின் முதல் தர வங்கியாகவும் அரச வங்கியாகவும் உள்ள இலங்கை வங்கியின் நவீன மயப்படுத்தப்பட்ட கிளையானது இன்று மட்டக்களப்பு,மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் திறந்துவைக்கப்பட்டது.
வவுணதீவு சந்திக்கு அருகில் இந்த நவீனமயப்படுத்தப்பட்ட வங்கி கிளையானது வங்கியின் முகாமையாளர் தா.பிரியதர்சன் தலைமையில் திறந்துவைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
90வீதத்திற்கும் அதிகமானவர்கள் விவசாயிகளாகவும் மீன்பிடியை நம்பியவர்களாகவும் வாழும் பகுதியாக காணப்படும் மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலகப்பிரிவில் மக்களின் பொருளாதார ரீதியான மேம்பாடு மற்றும் வாழ்வாதார ரீதியான செயற்பாடுகளை மேம்படுத்தும் வகையில் இந்த கிளை நவீனமயப்படுத்தப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
சிறிய கிளையாக செயற்பட்டுவந்த நிலையில் இன்றைய தினம் சகல வசதிகளையும் கொண்டதாக நவீனமயப்படுத்தப்பட்டு கிளை திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் கிளைச்செயற்பாடுகளுக்கான பிரதி பொதுமுகாமையாளர் எச்.பிரியான் சில்வா,உதவிச்சேவைக்கான பிரதி பொதுமுகாமையாளர் திருமதி பிரியந்தி விஜயசேகர,மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் திருமதி என்.சத்தியானந்தி, மண்முனை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அனட்,இலங்கை வங்கியின் கிழக்கு மாகாண உதவி பொதுமுகாமையாளர் குமுது சமிந்த மகவத்த,வவுணதீவு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி வரதராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது அதிதிகள் வரவேற்கப்பட்டு தேசியக்கொடி,வங்கிக்கொடிகள் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மங்கலகரமான நேரத்தில நவீனமயப்படுத்தப்பட்ட வங்கியானது திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வின்போது வாடிக்கையாளர்களின் சேவைகள் ஆரம்பித்துவைக்கப்பட்டதுடன் சிறிய நடுத்தர உற்பத்தியாளர்களுக்கான கடன்களும் வழங்கிவைக்கப்பட்டன.இந்த நிகழ்வில் இலங்கை வங்கியின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,வாடிக்கiயாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.


















