கிருஷ்ணகுமார்
திருகோணமலை மாவட்டத்தின் கிளிவெட்டி – குமாரபுரம் படுகொலையின் 29ஆவது ஆண்டு நினைவுதினம் செவ்வாய்க்கிழமை (11) குமாரபுரத்தில் மிகவும் உணர்வு பூர்வமான முறையில் அனுஷ்டிக்கப்பட்டது.

குமாரபுரம் கிராம மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது படுகொலை செய்யப்பட்டவர்களின் புகைப்படங்களுக்கு விளக்கேற்றி மலர்தூவி, அஞ்சலி செலுத்தி இறந்தவர்களின் ஆத்ம சாந்தி வேண்டி பிரார்த்தனை இடம்பெற்றதுடன் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாள்களிடம் மகஜர் ஒன்றும் படுகொலை செய்யப்பட்ட உறவினர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குமாரபுரம் கிராமத்தில் அத்துமீறி நுழைந்த ஆயுததாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூடு மற்றும் வெட்டுச் சம்பவத்தின் காரணமாக பெண்கள், சிறுவர்கள் உட்பட 26 அப்பாவி பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டிருந்ததுடன் 15வயதான சிறுமி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருந்தார். இக் கொடூர சம்பவம் 1996.02.11ம் திகதி மாலை இடம்பெற்றிருந்தது.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக 96 இராணுவச் சிப்பாய்கள் கைது செய்யப்பட்டு மூதூர் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு நீதவான் மு.கோ.செல்வராசா அவர்களின் முன்னிலையில் தொடர்ச்சியாக 3 நாட்கள் அடையாள அணிவகுப்பு இடம்பெற்றது. இதன்போது 7 பேர் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு ஆரம்பகட்ட விசாரணை மூதூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இதன்போது போதிய சாட்சியங்கள் இருப்பதன் காரணமாக குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவை 154ஆவது பிரிவின்கீழ் திருகோணமலை மேல் நீதிமன்றத்திற்கு தீர்ப்புக்காக குறித்த வழக்கு பாரப்படுத்தப்பட்டது. இந்நிலையில் பாதுகாப்பு நிமிர்த்தம் குறித்த வழக்கானது அனுராதபுரம் மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை ஜுரிகள் சபை முன்னிலையில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில் 20 ஆண்டுகளுக்குப் பின்னர் 2016ம் ஆண்டு யூலை மாதம் 27ம் திகதி எஞ்சியிருந்த 6 முன்னாள் இராணுவ வீரர்களும் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டதுடன், அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்கப்பட்டனர்.

