குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது தனிமையை உணர்கின்ற முதியோர்களுக்காக சனிக்கிழமை(5) கல்முனையில் அஜா(AJAA) இல்லம் திறந்து வைக்கப்பட்டது.

அம்பாறை மாவட்டத்தில் பெண்களுக்காக முதன் முதலில் ஆரம்பமாகும் இம் முதியோர் இல்லத் திறப்பு விழா அஜா இல்ல ஸ்தாபகரும் இல்லத் தலைவருமான திருமதி சோதினி அருள்ராஜ்( ஜுடி) தலைமையில் நடைபெற்றது.
இத் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் கலந்து சிறப்பித்தார்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக், ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் விபுலமாமணி வி.ரி.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த இல்லம் ஸ்தாபகர் சோதினி அருள்ராஜ்ஜின் பெற்றோர்களான ராஜேஸ்வரி கதிரவேல் மற்றும் கதிரவேல் சின்னத்தம்பி ஆகியோருக்கு ஞாபகார்த்தமாக திறந்து வைக்கப்பட்டது.
வைக்கப்பட்டதுடன் இந்த இல்லத்தில் முதலில் குடும்பத்தால் கைவிடப்பட்ட அல்லது ஆதரவற்ற தனிமையான வயோதிப பெண்களுக்கு இடம் அளிக்கப்படவுள்ளது.
பின்னர் ஆண்கள் சிறுவர்கள் என இணைத்துக் கொள்ளப்பட உள்ளதாக அதன் பொறுப்பாளர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் இங்கு முக்கியமாக உளவளஆலோசனை வழங்கப்படவுள்ளதுடன் இவ்ஆலோசனை இல்லத்தில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியில் இருந்து ஆலோசனை தேவைப்படுவோருக்கும் வழங்கப்படவுள்ளது.
அத்துறையில் நிபுணத்துவம் வாய்ந்த சோதினி அருள்ராஜ்(கனடா) அதனை கடந்த பல வருடங்களாக பல பிரதேசங்களிலும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாறுக் ஷிஹான்