தனியார் வகுப்புகள் நடத்த தடை

மட்டக்களப்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஞாயிறு மற்றும் போயா தினங்களில் தனியார் வகுப்புகள் நடத்த தடை விதிப்பு மற்றும் விளம்பர பலகைகள் தமிழ் மொழி கட்டாயம், கட்டாக்காலி மாடுகள், நாய்கள் கட்டுப்படுத்தல் உட்பட 9 பிரேரணைகள் வியாழக்கிழமை(17) இடம்பெற்ற மாநகர சபை அமர்வில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாநகரசபையின் 8 வது சபையின் இரண்டாவது சபை அமர்வு மாநகரசபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் சபா மண்டபத்தில் வியாழக்கிழமை (17) இடம்பெற்றது.

இதன் போது மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களிலுள்ள தனியார் கல்வி நிலையங்களில் இடம்பெற்று வரும் பிரத்தியோக வகுப்புக்கiளை ஞாயிறு மற்றும் போயா தினங்களில் சட்டரீதியாக தடை செய்ய வேண்டும் என சபை உறுப்பினர் தயாளராசா தரணி ராஜ் பிரேரணையை கொண்டு வந்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் துரைசிங்கம் மதன் செம்மணி புதைகுழி படுகொலையை கண்டித்து அதை சர்வதேச கண்காணிப்புடன் அரசு விசாரணை செய்ய வேண்டும் எனவும் மாநகர சபையின் சரியான எல்லையை உறுதிப்படுத்தி எல்லையில் வரவேற்பு கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற பிரேரணைகளை முன்வைத்தார்.

மாநகர சபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் உள்ள வர்த்தக நிலையங்கள் மற்றும் இதர காட்சிப்படுத்தப்படும் விளம்பர பலகையில், முதலில் தமிழ் மொழி கட்டாயம் இருக்க வேண்டும் என்ற பிரேரணையை உறுப்பினர் வைரமுத்து தினேஷ்குமார் கொண்டுவந்தார்.

அதனை தொடர்ந்து உறுப்பினர் திருமதி தயாளகுமார் கௌரி வீதிகளில் உலாவும் கட்டாக்காலி நாய்கள் மற்றும் மாடுகளால் வீதி விபத்துக்கள் அதிகரித்துள்ளது எனவே இந்த கட்டாக்கலி மாடுகள், நாய்களை கட்டுப்படுத்துமாறு திராய்மடு, நாவற்கேணி புகையிரத கடவையில் நிரந்தரமாக கடவை காப்பாளர்களை நியமிக்குமாறு புகையிரத திணைக்களத்தை வலியுறுத்துமாறு பிரேரணையை கொண்டு வந்தார்.

இதையடுத்து உறுப்பினர் கருணாநிதி ஜனகன் மாநகர சபைக்கு உட்பட்ட அனைத்து பூங்காக்களுக்கும் பாதுகாப்பு உத்தியோகத்தரை நியமிக்குமாறு கொண்டுவரப்பட்ட பிரேரணையையடுத்து வீதி விபத்துக்களை தடுப்பதற்கான பிரேரணையை உறுப்பினர் செல்வராசா குமார் கொண்டு வந்ததையடுத்து திருப்பெருந்துறை சேத்துக்குடா பகுதிகளில் உள்ள விபுலானந்தா வீதி மற்றும் விநாயகர் வீதி ஆகிய இரு வீதிகளையும் ஒரு வழி பாதையாக மாற்றுமாறு மாசிலாமணி சண்முகலிங்கம் பிரேரணையை சபையில் முன்வைத்தார்

அதேவேளை மாநகர சபை முதல்வர் கள்ளியங்காடு மயானத்திற்கு அருகில் கொழும்பு பொரளையில் உள்ள மலர்சாலைகள் போன்ற ஒரு மலர்சாலையை மரக்கூட்டுத்தாபன பகுதியில் அமைக்க அரச காணியை பெறுவதற்கான ஒரு பிரேரணையை கொண்டு வந்ததுடன் மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் இடம்பெற்றுவரும் வீதி வியாபாரத்தில் தடை செய்து அதற்கு ஒரு தீர்வு காண்பதற்காக பெண் உறுப்பினர் ஒருவர் உட்பட 5 பேர் கொண்ட குழு ஒன்று நியமிக்கப்பட்டு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட அனைத்து பிரேரணைகளும் சபை குழுநிலை விவாதத்துக்கு விடப்பட்டு அவைகள் முன்மொழிந்து வழிமொழியபட்டு நிறைவேற்றப்பட்டது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *