பாறுக் ஷிஹான்
கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் 125ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு, சனிக்கிழமை (25) மாபெரும் இரத்ததான முகாம் நடைபெற்றது.

கல்முனை ஆதார வைத்தியசாலையின் ஒத்துழைப்புடன் காலை 8.00 மணியில் இருந்து மாலை 4.30 மணி வரை பாடசாலை வளாகத்தில் இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது. இந்நிகழ்வை பாடசாலை அதிபர் அருட் சகோதரர் ரெஜினோல்ட் பிரார்த்தனையுடன் ஆரம்பித்து வைத்தார்.

இதில் பிரதம அதிதியாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி மருத்துவர் நடராஜா றமேஸ் மற்றும் விசேட அதிதியாக வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் மருத்துவர் திருமதி பி.எம்.கவிதா ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

மேலும், 125ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வு நிறைவேற்றுக்குழுவினர் மற்றும் பாடசாலை சமூகத்தின் பங்களிப்புடன் இந்த இரத்ததான முகாம் மிகுந்த வெற்றியுடன் நடைப்பெற்றது.

கார்மேல் பற்றிமா பாடசாலையின் 125ஆவது ஆண்டு விழாவை ஒட்டி, ஒரு வருடத்திற்கு மாதாந்தம் பல நிகழ்வுகள் நடைபெற்று வருவதாக குறிப்பிடப்படுகிறது.





