முதலையால் இழுத்துச் செல்லப்பட்டவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பு – வாழைச்சேனை கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் பாலம் மந்திரியாறு பகுதியில் முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு பின்னர் இன்று (22) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கடந்த 20ஆம் திகதி மந்திரியாறு நீரோடை பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த போதே குறித்த நபரை முதலை இழுத்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முதலை இழுத்துச் சென்ற இளம் குடும்பஸ்தரை கடந்த இரு நாட்களாக குடும்ப உறவுகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று (22) காலை இடுப்புக்கு கீழ் பகுதி அற்ற நிலையில் காணாமல் போனவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப் பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை மேற்கொண்டுள்ளார்.

சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனையைத் தொடர்ந்து சடலத்தினை உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *