நீர் குழியில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சிறுவன்

வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சடலமாக பாதுகாப்பற்ற நீர் குழியில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவில் பதிவாகியுள்ளது.

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புற நகர் பகுதியான உடங்கா – 02 பௌஸ் மாவத்தை பகுதியில் இச்சம்பவம் நேற்று (22) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் மூன்று வயதான முஹம்மத் லுக்மான் என்ற ஆண் பிள்ளையே நீர் குழியிலிருந்து மரணமடைந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 3 மணித்தியாலமாக அப்பகுதியில் காணாமல் போயிருந்த குறித்த சிறுவனை பொதுமக்களுடன் இணைந்து பொலிஸாரும் தேடிய நிலையில் அச்சிறுவனின் வீட்டுக்கு அருகில் உள்ள வெற்றுக்காணியில் உள்ள பாதுகாப்பற்ற நீர்க்குழிக்குள் மரணமடைந்த நிலையில் சிறுவன் சடலமாக மீட்கப்பட்டார்.

மேலும் இச்சிறுவன் தவறி குறித்த குழியில் விழந்தாரா அல்லது கொலை செய்யப்பட்டு போடப்பட்டாரா என மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய சிசிடிவி காணொளி ஒன்றில் இனம் தெரியாத நபர் மரணமடைந்த சிறுவனை அழைத்துச் செல்லும் காட்சி ஒன்றும் பதிவாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

எனினும் சிறுவனை யார் அழைத்து செல்கின்றார்கள் என்பது தெளிவாக அடையாளம் காண முடியாமல் உள்ளதுடன் குழிக்குள் சிறுவன் எப்படி விழுந்தார் என்பதும் குறித்தும் குழப்பமான ஒரு நிலையும் காணப்படகின்றது.

மரணம் அடைந்தசிறுவனின் சடலம் தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வருகை தந்த சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.டி.எச. ஜெயலத் தலைமையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *