பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை
பாறுக் ஷிஹான்
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பாடசாலைகளில் டெங்கு களத்தடுப்பு நடவடிக்கை வியாழக்கிழமை(6) முன்னெடுக்கப்பட்டது.
கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே . மதன் தலைமையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் டெங்கு களத்தடுப்பு பணியாளர்கள் அடங்களான குழுவினர்கள் இப்பரிசீலனை நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.
இதன் போது காரியப்பர் வித்தியாலயம் , லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயம், மல்ஹறுஸ் ஸம்ஸ் தேசிய பாடசாலை, உள்ளிட்ட பாடசாலைகளில் டெங்கு மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
மேற்குறித்த மூன்று பாடசாலைகள் பொதுச் சுகாதார பரிசோதகர்களின் கீழ் உள்ள பரிசீலனை செய்யப்பட்டது .அத்துடன் இந்த மூன்று பாடசாலைகளில் உள்ள ஆண் மாணவர்களின் மலசலகூடம் மிகவும் அசுத்தமானதாகவும் மோசமானதாகவும் காணப்படுகின்றன.
மேலும் டெங்கு நுளம்புகள் நுளம்புக் குடம்பிகளும் அதிகமாக இனம் காணப்பட்ட பாடசாலைகள் காணப்படுகிறமையால் அப்பாடசாலைக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
மேலும் பாடசாலையின் சுகாதாரத்தை சீர் செய்வதற்காக மிகக் குறுகிய கால அவகாசம் வழங்கப்பட்டது அந்த குறுகிய காலத்திலும் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள் அழிக்கப்படுவதுடன் மலசலகூடங்களும் சீரமைக்கப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.
இது தவிர குறிப்பிட்ட காலத்தில் சுகாதாரத்தை சிறப்பாக பேணாத பாடசாலைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்படும் எனவும் சூழலை பராமரிக்க களத்தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஜே . மதன் குறிப்பிட்டார்.
