பாறுக் ஷிஹான்
அரசின் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பான கலந்துரையாடலொன்று கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் சட்டத்தரணி ரி.எம்.எம். அன்சார் தலைமையில் இன்று (14) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கலந்துரையாடலில் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம்.அஸீம்இ உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்.ஜெளபர், சமூர்த்தி தலைமை பீட சிரேஷ்ட முகாமையாளர் எ. ஆர். எம். சாலிஹ், பொலிஸார், கடற்படை உயர் அதிகாரிகள் பள்ளிவாசல் நிர்வாகிகள், உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் தொடர்பாக விளக்கமளித்து அதனை கல்முனை பிராந்தியத்தில் வெற்றி கரமாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாகவும் கல்முனை பிரதேச செயலக பதில் பிரதேச செயலாளர் இங்கு விளக்கமளித்தார்.

இது தவிர அன்றைய நாள் அம்பாறை மாவட்டத்தின் பாணமை தொடக்கம் பெரியநீலாவணை வரையான சுமார் 110 கிலோ மீட்டர் நீளமான கடற்கரையோரத்தினை சுத்தம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதுடன், கரையோரத்தினை சுத்தம் செய்வது தொடர்பான வேலைத்திட்டம் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 16ம் திகதி மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தி அதன் பிரதான நிகழ்வை பொத்துவில் அறுகம்பையில் அரசாங்க அதிபரின் தலைமையில் நடத்தப்படவுள்ளது.
