காட்டு யானையின் தாக்குதலில் மட்டக்களப்பு சித்தாண்டி -ஈரளக்குளம் – குறுக்கண்ணாமடு வயற்பிரதேசத்தில் விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
சித்தாண்டி -ஈரளக்குளம் – குறுக்கண்ணாமடு பிரதேசத்தைச் சேர்ந்த 63 வயதுடைய ஆறு பிள்ளைகளின் தந்தையான வைரமுத்து நல்லரெத்தினம் என்பவரே பலியானவரென தெரிவிக்கப்படுகிறது.
இவர் குறுக்கண்ணாமடு பகுதியிலுள்ள தனது பசுமாட்டுப்பண்ணையை பார்க்கச் சென்ற வேளை காட்டு யானை வழிமறித்துத் தாக்கியதையடுத்து வீதியோரம் குற்றுயிராய்க் கிடந்துள்ளார்.
இவ்வேளை அவ்வழியே சென்ற இவரது குடும்ப உறவினர் ஒருவர் இவரை அவதானித்து மோட்டார் சைக்கிளில் சந்திவெளி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுகொண்டிருந்தவேளை உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரணவிசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் சந்திவெளி வைத்தியசாலைக்குச் சென்று மரண விசாரணையினை மேற்கொண்டார்.
பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் உடல் கூறு பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதையடுத்து சடலம் நல்லடக்கத்திற்காக குடும்ப உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கரடியனாறு பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிருஷ்ணகுமார்


