சாணக்கியன் எம்.பியின் கருத்துக்கள் பச்சைப் பொய் – முன்னாள் உறுப்பினர் குற்றச்சாட்டு

பாறுக் ஷிஹான்

பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் காட்டுமாறு கேட்டுக் கொள்கிறேன் என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி என்றழைக்கப்படும் குமாரசாமி புஸ்பகுமார் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட ஊடக மையத்தில் வியாழக்கிழமை (06) மாலை சாணக்கியன் எம்.பி தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் இனியபாரதி விசேட ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் என் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் தெரிவித்தது அப்பட்டமான பொய். முதுகெலும்பு இருந்தால் நேரடியாக வந்து இவ்வாறு ஊடக மாநாட்டில் அவ்விடயத்தை நிரூபிக்கட்டும். நான் அவருக்கு பகிரங்கமாக சவால் விடுகிறேன். மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் பாராளுமன்றத்தில் அண்மையில் தெரிவித்த கருத்தை மறுக்கின்றேன். அவருக்கு பாராளுமன்ற சிறப்புரிமை இருக்கிறது என்பதற்காக மற்றவரின் சுய கௌரவத்தை உரிமையை இழுக்கும் உரிமை அவருக்கு இல்லை. பிள்ளையானின் சகா நான் என குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கும் அவருக்கும் இடையே முரண்பாடுகள் தான் அதிகம். இவ்வாறு இருக்க இவ்வாறு என்னை இழுத்து இருக்கின்றார்.

அது மாத்திரமல்ல நான் கொழும்பு ஹில்டன் ஹோட்டலுக்கு சென்றதாக பச்சைப் பொய் சொல்லியிருக்கிறார். கடந்த இரண்டு வாரங்களில் நான் கொழும்பு செல்லவே இல்லை . எனது சாரதி சுதா என்று சொல்கின்றார். முடிந்தால் அந்த சுதாவை காட்டுமாறு சவால் விடுகின்றேன் .எனவே தான் பாராளுமன்றத்தில் பச்சைப் பொய் சொல்லி மக்களை ஏமாற்றி வருகின்ற அவரின் இந்த சித்து விளையாட்டுகளை இனியாவது மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இவ்விடயம் தொடர்பாக பொலிஸ்மா அதிபரிடம் நான் முறைப்பாடு ஒன்றை வழங்கவுள்ளேன். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியுமாக இருந்தால் அவர் இவ்வாறான ஊடக மாநாட்டை நடத்தி பகிரங்கமாக நேருக்கு நேர் கூறட்டும் என சவால் விடுகின்றேன் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *