கிருஷ்ணகுமார்
சித்தரினால் ஸ்தாபிக்கப்பட்ட ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட பிரசித்திபெற்ற மட்டக்களப்பு செட்டிபாளையம் சோமகலாநாயகி சமேத சோமநாதலிங்கேஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

05ஆம் திகதி கும்பாபிசேக கிரியைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்றுவந்த நிலையில் வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் அடியார்கள் எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த எண்ணெணைக்காப்பு சாத்தும் நிகழ்வில் இலங்கையின் பல பாகங்களிலுமிருந்து ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.

கொக்கட்டிச்சோலை தான்தோன்றீச்சரம் ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ மு.கு.சச்சிதானந்த குருக்கள் தலைமையில் கும்பாபிசேக கிரியைகள் நடைபெற்றன.

இன்று காலை விசேட பூஜைகளுடன் கிரியைகள் ஆரம்பமாகி யாக குண்டங்களின் யாக பூஜைகள் நடைபெற்றதை தொடர்ந்து பிரதான கும்பம் உட்பட கும்பங்கள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு பிரதான தூபி மற்றும் பரிபாலன தெய்வங்களின் தூபிகள் அபிசேகம் செய்யப்பட்டது.

அதனை தொடர்ந்து பிரதான கும்பம் கருவறைக்குள் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு சிவ மேளங்கள்,நாதஸ்வர இசை முழங்க பக்தர்களின் அரோகரா கோசத்திற்கு மத்தியில் கும்பாபிசேகம் சிறப்பாக நடைபெற்றது.
கும்பாபிசேகத்தினை தொடர்ந்து தசமங்கல தரிசனம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.
இன்றைய கும்பாபிசேக நிகழ்வில் சித்தர்கள் பலர் கலந்துகொண்டதுடன் வெளிநாட்டவர்களும் கலந்துகொண்டமை சிறப்பம்சமாகும்.
