கறுப்பு ஜனவரியை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்கள் இன்று (30) மாலை தீப்பந்த போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை நினைவுகூறும் வகையில் ஆண்டுதோறும் அனுசரிக்கப்படும் கறுப்பு ஜனவரி நிகழ்வில், ஊடக சுதந்திரத்திற்கான பிரச்சினைகள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
இந்த போராட்டம் மட்டு. ஊடக அமையம், மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், மற்றும் கிழக்கிலங்கை செய்தியாளர் சங்கம் ஆகியவற்றின் இணைந்த ஏற்பாட்டில் மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக உள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நினைவுத்தூபியருகில் மாலை 6.00 மணியளவில் நடைபெற்றது.
வா. கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, முதலில் நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் பின்னர், தீப்பந்தங்களை ஏந்தியவாறு ஊடகவியலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீதி கோரி முழங்கிய கோஷங்கள்
போராட்டத்தில் ஊடகவியலாளர்கள், மதத் தலைவர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நீதிக்கான குரலை எழுப்பினர்.
பங்கேற்பாளர்கள் “படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நீதிவேண்டும்”, “ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்து”, “கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு பொறுப்புக்கூறு”, “ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் அடக்காதே” ஆகிய கோசங்களை எழுப்பி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்த போராட்டம் ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான கேள்விகளை மீண்டும் முன்வைத்துள்ளது.











