தென்கிழக்குப் பல்கலையில் நில பராமரிப்பு வளநிலையம் அங்குராப்பணம்

இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நில பராமரிப்புப் பிரிவுக்கு நீண்டகாலமாக நிலவிய கட்டிடத் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நில பராமரிப்பு வளநிலையக் கட்டிடத் தொகுதி செவ்வாய்க்கிழமை(12) பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டு, குறித்த பிரிவினரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

சுமார் ஐந்து மில்லியன் ரூபாய் செலவில், கட்டமைக்கப்பட்ட இக்கட்டிடத் தொகுதி, நில பராமரிப்புப் பிரிவின் செயல்திறனை மேம்படுத்தும் பல்வேறு பணிகளுக்குப் பயன்படவுள்ளது. குறிப்பாக, பிரிவின் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ஆய்வுகூட வசதி உள்ளிட்ட பல்வேறு தேவைகளை நிவர்த்திக்க பயன்படுத்தப்படவுள்ளது.

கட்டிடத் திறப்புவிழா, பல்கலைக்கழக பராமரிப்புப் பிரிவின் தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீலின் வழிகாட்டுதலின் கீழ், சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. விழாவில் கலந்துகொண்ட உபவேந்தர், உரையாற்றும் போது, பல்கலைக்கழக வளாகத்தின் பராமரிப்பில் குறித்த பிரிவின் உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது எனக் குறிப்பிட்டதுடன், புதிய வளநிலையத்தின் மூலம் பணிகளின் தரமும் விரைவுமாக முன்னேறும் என நம்பிக்கை தெரிவித்தார்.

இந்நிகழ்வில் பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர், பதில் நிதியாளர் சி.எம். வன்னியாராச்சி, பல்கலைக்கழக பராமரிப்புப் பிரிவின் உயர்மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் என பலரும் பங்கேற்றனர்.

மேலும், நிகழ்வின் போது பதில் பதிவாளர் எம்.ஐ. நௌபர் மற்றும் பராமரிப்புப் பிரிவின் தலைவர் பொறியியலாளர் எம்.எஸ்.எம். பஸீல் ஆகியோரும் உரையாற்றி, புதிய வளநிலையம் பிரிவின் முன்னேற்றத்திற்கு வித்திடும் எனத் தெரிவித்தனர்.

புதிய வளநிலையத்தின் அங்குராப்பணம், பல்கலைக்கழகத்தின் அடிப்படை சேவைகளின் தரத்தை மேம்படுத்தும் முக்கிய அடிக்கல் என பங்கேற்பாளர்கள் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *