தோணா பாலத்தின் கட்டுமான பணிகள் ஆரம்பிக்க ஏற்பாடு -மக்கள் எதிர்ப்பு

பாறுக் ஷிஹான்

சாய்ந்தமருது கடற்கரை வீதி இணைக்கும் தோணா பாலம் உடைந்து விழும் ஆபத்தில் உள்ளதால் செப்பனிட்டு அழகு படுத்துவது பெரும் உயிர் ஆபத்தை ஏற்படுத்தும் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள மிக பழமையான தோணா பாலத்தினை சிறு திருத்தங்கள் மாத்திரம் செய்து அழகு படுத்த முயற்சிக்கும் செயற்பாட்டை பொதுமக்கள் கண்டித்துள்ளதுடன் குறித்த பாலத்தின் கீழ் பகுதியில் உள்ள அபாயகரமான நிலைமையையும் தெளிவு படுத்தினர்.

அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பிரதேசத்தில் அமைந்துள்ள இப்பாலத்தின் ஊடாக சாய்ந்தமருது பழைய ஆஸ்பத்திரி உப தபாலகம் கமு/கமு/றியாலுல் ஜன்னா வித்தியாலயம் அஷ்ரப் ஞாபகர்த்த பூங்கா பள்ளிவாசல் மீனவர்களின் கட்டிடத்தொகுதி என பல்வேறு அரச தனியார் காரியாலயங்கள் வர்த்தக நிலையங்கள் காணப்படுகின்றன.

மேலும் இப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தொழில் நிமர்த்தம் காரணமாக அதிக பயணங்கங்களை மேற்கொண்டு வருகின்றனர்.அத்துடன் குறிப்பாக அதிக கனரக வாகனங்கள் பயணிப்பதால் தற்போது இந்தப்பாலம் பலத்த சேதத்திற்கு உள்ளாகி உள்ளது.மேலும் கடந்த 2004 ம் ஆண்டு நாட்டில் ஏற்பட்ட சுனாமி பேரழிவிலும் குறித்த பாலம் பாதிப்படைந்ததுடன் தற்போது உடைந்து விழும் நிலையில் உள்ளது.

இன் நிலையில் பாலத்தின் பாதுகாப்பிற்காக உள்ள மேல் தூண்களை மாத்திரமே அகற்றி அழகு படுத்துவதால் எதிர்காலத்தில் பாரிய ஆபத்துகள் இடம்பெறும் என சம்பந்தப்பட்டவர்கள் கருத்தில் கொள்ள வேண்டும் என பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

2021 ஆம் ஆண்டு இப்பாலத்திற்கான திட்ட வரைபடம் வரையப்பட்டு, குறித்த திணைக்கள நிறுவன அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு முறையான அங்கீகாரம் கிடைத்தன் பிற்பாடு அப்போதைய அமைச்சரவையின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு செயற்பட இருந்த நிலையில் பொருளாதார நெருக்கடி காரணமாக துரதிஷ்டவசமாக கைவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் அபாயகரமான இருக்கின்ற இப்பாலம் புனர்நிர்மானம் செய்யும் நிலையில் தற்போது இல்லை என்பதுடன் அதன் அனைத்து மூலப்பொருட்களும் செயலிழந்த நிலையில் உள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதுடன் பிரதேச அரசியல்வாதிகள், சம்மந்தப்பட்ட அதிகாரிகள், பொறுப்புவாய்ந்த உத்தியோகத்தர்கள் அனைவரும் இந்த புனர்நிர்மான வேலைக்கு எடுக்கப்பட்ட முடிவை மறுபரிசீலனை செய்து இந்தப்பாலத்தை முற்றாக அகற்றி புதிய பாலம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு முயற்சி மேற்கொள்ளுமாறு இப்பிரதேச பொதுமக்கள் சிவில், சமூக அமைப்புக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *