பாறுக் ஷிஹான்
பொதுமக்கள் தங்களது சுகாதார சேவைகள் குறித்த முறைப்பாடுகளை தெரிவிப்பதற்காக QR குறியீட்டு முறைமை அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனைக்கு அமைவாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜே. மதன் இதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளார்.
சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் பொதுமக்கள் ஒன்று கூடும் இடங்களில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கான இந்த QR குறியீட்டு ஸ்டிக்கர் அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு சனிக்கிழமை (1) சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலையின் பொறுப்பு வைத்திய அதிகாரியும் சாய்ந்தமருது ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் சம்மேளனத் தலைவருமான டாக்டர் சனூஸ் காரியப்பர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதனை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
மேலும் இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவரும், சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் பொதுச் சுகாதார பரிசோதகர்களும் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்திற்குட்பட்ட உணவு கையாளும் நிறுவன தலைவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
