பெண்களின் சட்ட விடயங்க சட்டரீதியாக பாதுகாக்கப்பட வேண்டும்

அனைத்து பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளுக்கு உரிமைகள் சமத்துவம் வலுவூட்டல் எனும் தொனிப்பொருளில் சர்வதேச மகளீர் தின வட்டமேசை கலந்துரையாடல் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை மண்டபத்தில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் தலைமையில் இன்று இடம்பெற்றது.

இதன் போது உரையாற்றிய அவர்,

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மனித உரிமைகளை மேம்படுத்தி பாதுகாப்பதில் முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற சுதந்திரமான ஒரு நிறுவனமாகும். பெண்களின் சட்ட விடயங்களில் உள்ள இடைவெளிகள் சட்டரீதியாக பாதுகாக்கப்படவேண்டிய தேவை உள்ளது என்பதால் இது தொடர்பாக துறை சார்ந்த வல்லுநர்களின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டு அது பற்றி பொதுமக்களின் அபிப்பிராயங்கள் பெறப்பட்டு இச்சட்ட திருத்தங்களையும் புதிய சட்டங்களையும் கொண்டு வருவதற்காக பரிந்துரைகளை செய்ய வேண்டிய கடற்பாட்டிற்கு உள்ளாகின்றது என்பதால்தான் இவ் வட்டமேசை கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என கூறினார்.

இந்நிகழ்வின் பிரதம அதிதியாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.டபிள்யூ.என். நளீபா விசேட சொற்பொழிவாற்றினார்.கல்முனை பிரதேச செயலாளர் ரி.எம்.எம். அன்சார் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஏ.ரி.எம். றாபி ஆகியோர் பெண்கள் தொடர்பிலான சட்ட இடைவெளிகள் பற்றியும் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டிய தேவை பற்றியும் கருத்துரை வழங்கினார்கள்.

அதன்படி குடும்ப வன்முறை சட்டம் தனியார் சட்டம் வேலைத்தளங்களில் பெண்களுக்கெதிரான நடைபெறும் பாலியல் தொந்தரவு உள்ளுராட்சி சபைகளில் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் சமூக வலைதளங்களில் பெண்களை இழிவுபடுத்துதல் பெண்களின் தொழில் உரிமைகள் பெண்களுக்கான விசேட பாதுகாப்பு போன்ற விடயங்கள் சபையில் கலந்துரையாடப்பட்டது.

இந்நிகழ்வில் அரச அரச சார்பற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் சிவில் மக்களும் கலந்து கொண்டனர்.

பாறுக் ஷிஹான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *