எண்ணெய் கொள்கலன்களை கடத்திய சந்தேக நபர் கைது

பாறுக் ஷிஹான்

கடை ஒன்றின் முன்பாக  வைக்கப்பட்டிருந்த எண்ணெய் கொள்கலன்களை வாகனம் ஒன்றில் கடத்திய சந்தேக நபரை கல்முனை தலைமையக பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவில் உள்ள கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் முன்பாக உள்ள பலசரக்கு கடை ஒன்றில் வியாழக்கிழமை (13) அதிகாலை எண்ணெய் கொள்கலன்கள் களவாடப்பட்டுள்ளதாக அதன் உரிமையாளரினால் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாட்டிற்கமைய கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் இப்னு அசார் ஆலோசனைக்கமைய கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.ரம்சீன் பக்கீர் வழிகாட்டலில் செயற்பட்ட கல்முனை குற்றப்புலனாய்வு பிரிவு பொறுப்பதிகாரியும் பிரதம பொலிஸ் பரிசோதகருமான அலியார் றபீக் தலைமையிலான பொலிஸார் விரைந்து செயற்பட்டு மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூர் பகுதிக்கு களவாடி எடுத்துச் செல்லப்பட்ட பரல்கள் உட்பட வாகனம் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் ஒருவரும் கைதானார்.ஏனைய தப்பி சென்றுள்ள இரு சந்தேக நபர்களையும் சிசிடிவி காணொளிகள் மற்றும் ஏனைய தகவல்களின் ஊடாக  பொலிஸார் விசேட தேடுதல் மேற்கொண்டு கைது செய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், குறித்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்று  சந்தேக நபர் உட்பட களவாடப்பட்ட பொருட்கள் வாகனங்கள் சுமார் 7 மணித்தியாலங்களில் மீட்ட பொலிஸாருக்கு பொதுமக்கள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். இதே வேளை களவாடப்பட்ட குறித்த பொருட்களை உடமையில் வைத்திருந்த சந்தேக நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட 22 வயதுடைய  சந்தேக நபர் மற்றும் ஏறாவூர் மற்றும் செங்கலடி பகதிகளில் மீட்கப்பட்ட சான்று பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக  கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *