வாள்வெட்டு தாக்குதலில் 2 பேர் காயம்

கிருஷ்ணகுமார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தவர்கள் மீது வியாழக்கிழமை (20) மாலை 6 மணியளவில் 5 பேர் கொண்ட குழு வாள்களுடன் நுழைந்து தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடி தலைமறைவானவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

இதுபற்றி தெரியவருவதாவது,
ஆரையம்பதி மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்தில் இளைஞர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இதன்போது அங்கு வாள்களுடன் நுழைந்த 5 பேர் கொண்ட வாள் வெட்டுக்குழு விளையாடிக் கொண்டிருந்த சிலர் மீது துரத்தி துரத்தி வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதில் இருவர் படுகாயமடைந்து அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.

இதையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.
கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் கோவில் ஒன்றில் காயமடைந்தவர்களுக்கும் தாக்குதலை நடத்திய வாள்வெட்டுக் குழுவிற்கும் இடையே இடம்பெற்ற தகராற்றினையடுத்து பழிவாங்கும் நோக்கோடு இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் தலைமறைவாகியுள்ளதாகவும் அவர்களை கைது செய்ய நடவடிக்கை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *