அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது

கிருஷ்ணகுமார்

உள்ளூராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்திவருகின்றது.

மட்டக்களப்பு நகரில் உள்ள தேர்தல் அலுவலத்தில் இன்றைய தினம் அரசியல் கட்சிகளும் சுயேட்சைக்குழுக்களும் கட்டுப்பணம் செலுத்தியது.

போராட்ட முன்னணியினர் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள மட்டக்களப்பு மாநகரசபை உட்பட 12உள்ளூராட்சிமன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தப்போவதாகவும் பொதுமக்களுக்கு புதிய ஆட்சி முறையினை ஏற்படுத்தப்போவதாகவும் போராட்ட முன்னணியினர் தெரிவித்தனர்.

இன்று அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸினால் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஊடாக உள்ளுராட்சிமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதுடன் இம்முறை 11 உள்ளூராட்சிமன்றங்களில் போட்டியிடவுள்ளதாக தர்மலிங்கம் சுரேஸ் இதன்போது தெரிவித்தார்.

இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தலைமையில் தேர்தல்கள் அலுவலகத்தில் கட்டுப் பணம் செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபை உட்பட மட்டக்களப்பு மாவட்டத்தின் 12 உள்ளுராட்சிமன்றங்களிலும் போட்டியிடவுள்ளதாகவும் எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் ஊடாக ஐக்கிய தேசிய கட்சி அனைத்து உள்ளுராட்சிமன்றங்களையும் கைப்பற்றும் எனவும் முன்னாள் அமைச்சர் அலி ஸாஹிர் மௌலானா தெரிவித்தார்.

இதேபோன்று கடந்த முறை மண்முனை தென் மேற்கு பிரதேசசபையில் சங்கு சின்னத்தில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்கள் இம்முறை சுயேட்சையாக போட்டிவிடுவதற்காக கட்டுப்பணம் செலுத்தினார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *