பாறுக் ஷிஹான்
பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பது பேச்சில் மட்டும் நின்றுவிடக் கூடாது என சமூக செயற்பாட்டாளரும் பொறியியலாளருமான உதுமான்கண்டு நாபீர் தெரிவித்தார்.
சர்வதேச மகளீர் தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
எமது நாட்டில் இதுவரையில் மகளிர் தினக் கொண்டாட்டங்கள் பெண்களின் உரிமைகள் பற்றி பேசுவதாக மாத்திரமே இருந்த போதிலும் பெண்களின் உரிமைகள் பேச்சளவில் மாத்திரம் இருக்கக் கூடாது . அதற்காக அரசாங்கம் தற்போது தேவையான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளைக் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாரம்பரிய வகிபாகங்களுக்கு அப்பாற்பட்ட அறிவு திறன் மற்றும் தொழில் தன்மையுடன் கூடிய இலங்கைப் பெண்கள் இன்று இந்நாட்டின் பொருளாதாரத்திற்கு தனித்துவமானப் பங்களிப்பை வழங்கி வருகின்றனர்.உலகில் பெண்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றனர். ஒரு நாளுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் வருடத்தில் 365 நாட்களும் அவளுக்கு மரியாதையும் பலமும் கொடுக்கப்பட வேண்டும். பெண்கள் காலூன்றி நிற்கும் வகையில் பொருளாதாரம் வலுப்பெற வேண்டும்.
இத்தகையப் பின்னணியில் குடும்பம் மட்டுமின்றி சமூகத்திலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்றுக்கொண்டிருக்கும் பெண்கள் நாட்டின் அபிமானத்திற்குரியவர்கள்.இன்று நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்கும் மாணவர்களில் பெண்களே பெரும்பான்மையாக உள்ளனர். ஆனால் பல்கலைக்கழகக் கல்வியை முடித்து திருமணம் செய்து குழந்தைகளைப் பெற்ற பிறகு அவர்களின் பயணம் நிறுத்தப்படுகிறது. குழந்தைகளைப் பெற்றெடுப்பதும் தாயாகுவதும் விலைமதிப்பற்றது. ஆனால் அவர்களின் பயணம் இதோடு நின்றுவிட வேண்டியதில்லை.நம் நாட்டிற்கு அதிக அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவது பெண்கள்தான் என்பதைப் பெருமையுடன் நினைவுகூர வேண்டும். மேலும் விவசாயத் தொழில்துறை ஆடைத் தொழிலில் பெண்களே அதிக பங்களிப்பு செய்கின்றனர். ஒரு நாட்டின் அரசியலையும் பொருளாதாரத்தையும் மாற்றுவதன் மூலம் எதிர்காலத்தை தீர்க்கும் திறன் பெண்களுக்கு உள்ளது.
மேலும் மகளிர் தினத்தை ஒரு தினத்திற்கு மட்டுப்படுத்தாமல் புதிய சட்ட திட்டங்கள் மற்றும் கொள்கைகளை உருவாக்கிப் பெண்களின் அபிமானம் மற்றும் பாதுகாப்பிற்காக அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் பெண்கள் மீதான பாகுபாட்டைத் தவிர்க்க முதல் முறையாக தேசிய ஆண் பெண் பாலினக் கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளமை சிறப்பம்சமாகும்.அத்தோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கத் தேவையான சட்ட திருத்தங்களையும் அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.இது தவிர அம்பாறை மாவட்டத்திலும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் பாடசாலை கல்வி மற்றும் உயர்கல்வியை இடை நடுவில் கைவிட்டவர்களை இனங்கண்டு அவர்களுக்கான தொழிற்துறைகளை உருவாக்குவதும் இக்காலத்தின் தேவையாகவுள்ளது.திருமண வயதை எட்டியும் பொருளாதார சிக்கலினால் அவற்றை நிறைவேற்ற சிரமங்களை எதிர்கொள்ளும் பெண்களை இனங்கண்டு அவற்றிற்கான தீர்வினை காண முன்வர வேண்டும்.எதிர்காலத்தில் சுமார் 5000 பெண்களுக்கு இதனடிப்படையில் பல்வேறு வசதி வாய்ப்புக்களை வழங்க உள்ளேன்.
எதிர்கால சந்ததியினருக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் வளமிக்க நாட்டைக் கட்டியெழுப்புவதற்கான எதிர்பார்ப்பதோடு சர்வதேச மகளிர் தின வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறேன்.